Tuesday 18 September 2012

கோவா பயணம் - 03


புனித சவேரியார் ஆலயத்திற்கு நேர்எதிரே சற்று தொலைவில் 16 ஆம் நூற்றாண்டின் புனித அகஸ்டஸ் காம்ப்ளெக்ஸ் உள்ளது. 1572 இல் கட்டப்பட்டு, தாழ்வாரங்கள், தூண்கள், காட்சியகங்கள், பல அறைகள், அலுவலகம், துறவி மடம், உணவு கூடம், விருந்தினர் விடுதி, மற்றும் மருத்துவமனை கொண்ட மண்டபங்கள் என்று விரிவடைந்திருக்கின்றன.இதை 1835 இல் இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 1846 இல் இந்த தேவாலயத்தின் முக்கியப் பகுதி சரிந்தது.பலவாறும் சிதைந்து போய், இன்று வெறும் கட்டமண் சுவர்களாக நிற்பதைத்தான், தற்போது இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் பராமரித்து வருகிறது.பழமையை, வரலாற்றை அறிய ஆசைப்படும் மனங்களுக்கு எத்தனையோ செய்திகளைச் சொல்லக் காத்திருக்கிறது இவ்வளாகம்.
அங்கிருந்து அகுடாகோட்டைக்குச் சென்றோம். அகுடாகோட்டை டச்சு மற்றும் மராட்டியர்களின் படையெடுப்புகளுக்கு எதிராக பாதுகாப்பு கருதி 1612இல் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோட்டையின் சுவர்கள் 5 மீட்டர் உயரமும் 1.3 மீட்டர் அகலமும் கொண்டது.
“அகுடா” என்றால் பெறப்பட்ட, தண்ணீர் என்று பொருள். கோட்டைக்குள் இருக்கும் நன்னீர் வசந்த காலத்தில் நிறுத்தப்படும் கப்பல்களுக்கு விநியோகிக்கப்படும். கோட்டையின் இன்னொரு சிறப்பம்சம் உள்ளே 13 மீட்டர் உயர கலங்கரை விளக்கம் உள்ளது.1864 இல் கட்டப்பட்ட இந்தக் கலங்கரை விளக்கத்தில் ஆரம்பத்தில் ஓர் எண்ணெய் விளக்கு மட்டுமே பயன்படுத்தப் பட்டதாம். அதன் பின்னர் 1976 இல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும்,  பழைய கோவாவில் உள்ள புனித அகஸ்டஸ் காம்ப்ளெக்ஸ் இடிபாடுகளிருந்து பெறப்பட்ட மிகப் பெரிய மணி இங்குதான் இருந்திருக்கிறது.அது 1871 இல் பனாஜி தி இம்மாகுலேட் கன்செப்ஷன் தேவாலயத்தில் பொருத்தப்பட்டிருக்கிறது.
ஹாலங்குட் கடற்கரைக்குச் சென்றோம். பிற்பகல் வெயிலில், அகன்ற மணல்பரப்பைத் தாண்டி இருந்த கடற்கரையில் அதிகமான மக்கள் அலை. பாரா சூட்டில் பறப்பது,கடலில் மோட்டார் பைக்கில் செல்வது போன்ற விளையாட்டுக்கள் சுவரஸ்யமானவை.இவை வெளிநாட்டவரை மிக எளிமையாகக் கவர்கிறன. பாராசூட்டிற்காக ஆள்பிடிக்கும் புரோக்கர்களும் அக்கடற்கரையில் அலைகின்றனர். ஒரு ட்ரிப்புக்கு ரூ.500/- வாங்குகிறார்கள். பாராசூட்டில் பறப்பவர்களை கடல் நீரில் தோய்த்து மீண்டும் பறக்க வைப்பது நம்மைப் போன்ற பார்வையாளருக்கே மயிர்கூச்செரிவதாக உள்ளது. அருகில் சென்று பார்த்தால், பாராசூட் சாதாரண நைலான் கயிறுகளாலேயே கட்டப்பட்டிருக்கிறது. மோட்டார் படகை இணைப்பதும் இதே கயிறுதான். இது அவ்வளவு பாதுகாப்பானதாக இருக்குமென்று நமக்குத் தோணவில்லை.
தமிழகக் கடற்கரைகளில் குறிப்பாக, கன்னியாகுமரி, திருச்செந்தூர், வேளாங்கண்ணி போன்ற ஊர்களில் உள்ள கடற்கரைகளில் சொரசொரப்பான பாறைகள், ஆழமான பகுதிகள், பெரிய அலைகள் இருக்கின்றன. இங்கு அந்தப் பயம்வேண்டாம். ஏனெனில், சிறு சிறு தீவுகளும் சுற்றிக் கடலுமாக இருப்பதால் – ஆழமற்றதும், பெரும் அலைகளற்றதுமாகவே உள்ளன. அங்கு வெளிநாட்டவர் சூரியக்குளியல் எடுப்பதற்காக சாய்வான மரப்படுக்கைகள் உள்ளன. நமக்கு வெயிலில் வியர்வை சொட்டுகிறது. ஆனால் அவர்களோ சுகமாகப் படுத்திருக்கிறார்கள்.அதன் அருகிலேயே மதுபான வசதியுடன் கூடிய ஹோட்டல் இருக்கிறது.(இது எல்லா பீச்சிலும்,சாலையிலும்தான்!). அங்கு அமர்ந்திருந்த ஆங்கிலேய ஜோடியில், அவன் மதுப்பாட்டிலை ஓப்பன் செய்து கிண்ணத்தில் ஊற்றித்தர, அவளோ ஒரு கையில் மதுக்கிண்ணமும், மறுகையின் விரலிடுக்கில் சிகரெட்டைத் தாங்கியவளாய், ஸ்டைலாக புகையை மேல் நோக்கி ஊதிக் கொண்டே பேசிக்கொண்டிருந்தாள்; அவனோ மதுவைக் குடித்துக்கொண்டே மாதுவின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தான்.
ங்கிருந்து வெளியே வந்த போது, நடைபாதை வண்டியில், செங்குத்து ஸ்டீல் வலைக்குள் அதி வேகமாக நெருப்பைக் கக்கிக் கொண்டிருக்கும் அடுப்பில், நேரே நின்று சுழலும் கம்பியில் சொருகி வைக்கப்பட்ட சிக்கன் சதைகள் வெந்து கொண்டிருந்தன. அவற்றைக் கீறி, சிறு சிறு துண்டுகளாக்கி தக்காளி மற்றும் கேரட் போன்ற துண்டுகளைக் கலந்து, பிரெட் அல்லது சப்பாத்தியுடன் தருகிறார்கள். அங்கு கூட்டம் மொய்க்கிறது. அது உடலுக்கு எந்த வகையிலும் ஆரோக்கியமானதாகத் தெரியவில்லை.
ஐஸ் வண்டி, தொப்பிக் கடை, டிசர்ட் கடை,… பார்த்துக்கொண்டே போகையில், வரிசையாக நிறுத்தியிருந்த விதவிதமான டூவீலர்கள் ஏராளம். சுற்றுலா வருபவர்கள் வாடகைக்கு எடுத்துச் செல்கிறார்கள். நாள் வாடகை ரூ.200/- முதல் ரூ.400/- வரை. ஆக்டிவாவுக்கு ரூ.200/- பஜாஜ் அவென்ஜருக்கு ரூ.400/-, அதாவது வாடகை – வண்டியைப் பொருத்து. நம் அடையாள அட்டையைக் காண்பித்து, விரும்பிய வண்டியைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment